Description
அப்போ இதெல்லாம் எதுக்கு. இந்த பூஜை எதுக்கு. இந்த ஜபம் எதுக்கு.
சும்மாயிருக்கிறதுக்குத்தான். நான் சொல்றது உங்களுக்கு ஏதாவது புரியுதா வரலட்சுமியம்மா.”
வரலட்சுமி இல்லை என்று தலையாட்டினாள்.
“வெறுமே எந்த செயலும் செய்யாத மனதிற்குள் இறைவன் வந்து அமர்கிறான். எண்ணங்களை ஏற்படுத்துவது தான் மனதின் சக்தி. அந்த எண்ணங்கள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட மனதின் வேறொரு சக்தி வெளிப்படுகிறது. எண்ணங்கள் ஏற்படுவதை எப்படி நிறுத்துவது. எண்ணங்களை உற்றுப்பார்க்கும்போது. இது யாருக்கு ஏற்படுகிறது என்று பார்க்கும்போது, எங்கிருந்து இந்த எண்ணம் உதயமாகிறது, அந்த உதயத்தை அந்த வேர்நுனியை கவனிக்கிறபோது மனம் வெட்கப்பட்டு சுருங்கத் துவங்குகிறது. மனம் சுருங்கி ஒன்றுமில்லாமல் போகிறது. மனம் காணாமல் போன நேரத்தில் வேறொரு சக்தி வெளிப்படுகிறது. உங்களைச் சூழ்ந்து கொள்கிறது. அதை விவரிக்க முடியாது. நீங்களற்று நடக்கின்ற அந்த மன அசைவில் உடல் அசைவில் வேறு விஷயங்கள் வெளியாகின்றன. உடம்பில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. மனம் முற்றிலும் படுத்துக் கிடங்க்கு காணாமல் போகிறபோது உங்களுடைய அவயங்கள் என்ன செய்வது என்று அறியாது நிலை குலைந்து முழு வேகத்தில் செயல்படத் துவங்குகின்றன. அப்போது உடம்பின் மற்றம் மிகப்பலமாய் இருக்கிறது. இதுவரை அனுபவித்திராத ஒரு வேகம் தோன்றுகிறது. அந்த வேகத்தை அனுபவிக்க அங்கு எவரும் இல்லை. எனவே எந்தக் குறிக்கோளும் இல்லாமல் பானையிலிருந்து உடைந்த ஜலம் போல உங்களிடமிருந்து சக்தி பீறிடுகிறது. அது பழக்க தோஷத்தினால் இதுவரை செய்து வந்த பழக்கம் போல பாட்டாகவோ, ஆட்டமாகவோ, பேச்சாகவோ இருக்கலாம் அல்லது இவை எதுவுமல்லாது வெறும் பிளிறலாய் அன்புச் சிரிப்பாய், ஆவேசமான கூக்குரலாயும் இருக்கலாம். பாட்டும் ஆவேசக் கூக்குரலும் ஒரு ஆட்டமும் ஒரு வெளிறச் சிரிப்பும் ஒன்றே. ஒரே விதமான வெளிப்பாடே. அப்படிப்பட்ட ஒரு நிலையிலிருந்து பாடியதுதான் இந்த அபிராமி அந்தாதி.
மனசே அடங்கிப் போயிடுதுன்னா மனசுக்குள்ளயிருக்கிற விதம்விதமான பசிகள் அம்பாளுடைய க்ருபையில் காணாமப் போயிடுத்துன்னா அப்புறம், என்ன நினைச்சுண்டிருப்ப. என்ன வேலை உனக்கு.
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
நினைப்பதுன்னை…
உள்ளுக்குள்ள எப்பவும் அவ நினைப்புதான். அந்த சாஸ்வதம்தான். அதுதான் முழுமை. அதுதான் முழுசு. அதுக்குத்தான் போராட்டம். அதுக்குத்தான் பூஜை. உள்ள இருக்கிறது அத்தனையும் சுத்தமாகத் துடைத்துவிட்டு அவள் கருணையை உள்வாங்கி அவளையே நினைத்துக் கொண்டிருப்பது. வேற ஒண்ணுமில்லை. இதுக்குத்தான் பூஜை. ஆடற மனசை நங்கூரம் போட்டு அடக்கறா மாதிரி ஒரு பயிற்சி. அலைஞ்சுண்டிருக்கிற துதிக்கைக்கு சங்கிலி கொடுத்து அசையாத யானையை கட்டிப் போட்டிருக்கிறா மாதிரி பார்த்திருக்கேளோ வரலட்சுமியம்மா. யானையை விட்டோம்ன்ன தும்பிக்கையால இங்க அங்க தொட்டுண்டே இருக்கும். சும்மாயிருக்க முடியாது. கையில ஒரு சங்கிலி கொடுத்துட்டு வா. அந்தச் சங்கிலியை கெட்டியாப் பிடிச்சிக்கும். அதைக் கீழப்போட்டுட்டு தொடணும்னு தோணாது. யானை கையில சங்கிலி கொடுத்த மாதிரி மந்திர ஜபத்தை மனசுக்குள்ள கொடுத்துட்டோம்னாக்க அது மந்திர ஜபத்தை பிடிச்சுண்டிருக்கும். இங்க அங்க, அதை இதை தொட்டுண்டு அலையாது. இது ஒரு பயிற்சி. இதுவொரு சாக்கு. ஆனால் இதுவே முழுமையல்ல. இதில் எந்தப் பெருமையும் இல்லை. இது எதை நோக்கிப் போக வேண்டும். மனம் அழிதல். தான் காணாமல் போதல். அப்போது வேறொரு சக்தி வருகிறது. அந்தச் சக்தியோடு இங்கே கிடத்தல். இதுதான் பூஜை.
Reviews
There are no reviews yet.